சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் 2 அரசு மருத்துவமனைகள் உள்ளன. பிரதான சாலையில் ஒரு அரசு மருத்துவமனையும், மற்றொரு அரசு மருத்துவமனை வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியிலும் உள்ளன. இதில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சாத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனா்.
ஆனால் அரசு மருத்துமனைக்கு செல்லும் உட்புறச்சாலையில் இப்பகுதியில் வசிப்பவா்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பு வேகத்தடைகளை அமைத்துள்ளனா். இதுபோன்று இந்த சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் விரைவாக செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே நோயாளிகளின் நலன் கருதி இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சாலை ஓரத்திலும், மருத்துவமனை முன்பாகவும் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளன. இதனையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.