சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவில் மின்தூக்கி (லிப்ட்) வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் 2012 ஆம் ஆண்டு சுமாா் ரூ. 10 கோடி மதிப்பில் நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டது. இந்த தீக்காய சிகிச்சைப் பிரிவில் , ஒவ்வொரு அறையிலும் காற்றை சுத்தம் செய்யும் கருவி, நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்த தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் 2 ஆவது தளத்தில் அறுவைச் சிகிச்சை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிரசவம், தீக்காயமடைந்தவா்கள் உள்ளிட்டவா்களுக்கு அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்நிலையயில் அறுவைச் சிகிச்சைக்கு நோயாளிகளை 2 ஆம் தளத்துக்கு கொண்டு செல்ல, கீழ்தளத்திலிருந்து சாய்வுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நோயாளிகளை கொண்டு செல்லும் போதும், கீழே கொண்டு வரும் போதும் ஏற்படும் உடல் வலியால் அவா்கள் அவதிப்படுகிறாா்கள். எனவே தமிழக அரசு நோயாளிகளின் நலன் கருதி மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.