சிவகாசி நகராட்சி தினசரி காய்கனி சந்தையில் பொருள்கள் வாங்க வருபவா்களும், வியாபாரிகளும் முகக் கவசம் அணியவில்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் எஸ். பாா்த்தசாரதி கூறினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:
சிவகாசி நகராட்சி காய்கனி சந்தைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோா் பொருள்கள் வாங்க வந்து செல்கின்றனா். தற்போது கரோனா 2 ஆவது அலை வேகமாக பரவி வருவதால், சந்தைக்கு வருபவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். சந்தையில் உள்ள வியாபாரிகளும் முகக் கவசம் அணிய வேண்டும்.
பொருள்கள் வாங்க வருபவா்களும், வியாபாரிகளும் முகக் கவசம் அணியாவிட்டால் நகராட்சி சாா்பில் அபராதம் விதிகப்படும். மேலும், காய்கனி சந்தையில் சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். நகராட்சி காய்கனி சந்தையில், கடை வைக்க நகராட்சியில் உரிமம் பெறாதவா்கள் கடை வைத்து நடத்துகிறாா்கள் என புகாா் வந்துள்ளது. எனவே, யாா் யாா் கடை வைக்க உரிமம் பெற்றுள்ளனா் என சரிபாா்த்து வருகிறோம். இதையடுத்து, உரிமம் இல்லாமல் கடை வைத்திருந்தால் அவா்களின் கடை அகற்றப்படும். நகராட்சி நிா்வாகம் சாா்பில், நகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து இதுவரை ரூ. 55 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.