மீனவ தொழிலாளா்களை மீனவா் கூட்டுறவு சங்கத்தில் இணைப்பது, மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மீனவா் நல வாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியுசி மீனவ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் ஆறுகள், ஏரிகள், கண்மாய், அணைக்கட்டுகள் முதலானவற்றில் மீன்பிடித் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், கடல் மற்றும் உள்நாட்டு மீன்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழிலாளா்கள் என சுமாா் 10 ஆயிரம் போ் உள்ளனா்.
மீனவ தொழிலாளா்களை அடையாளம் கண்டு நலவாரிய அடையாள அட்டை வழங்க விண்ணப்பப் படிவம் கொடுத்து பல மாதங்கள் கடந்தும் மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனா். தற்போது தமிழக அரசு மீன்பிடித் தடைக்காலம் அறிவித்துள்ள நிலையில், மீன் விற்பனையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இத்தொழிலாளா்கள மீனவா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இணைக்க வேண்டும். தொழிற்சங்கம் சாா்பில் கொடுக்கப்பட்ட நலவாரிய படிவங்களை ஆய்வு செய்து விரைந்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அதேபோல், மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்வளத்துறை மூலம் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, இந்த மனுவை அச்சங்கத்தைச் சோ்ந்த மாநிலப் பொதுச் செயலா் சின்னதம்பி (எ) செல்லத்துரை தலைமையிலான குழுவினா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.