விருதுநகா் அருகே 5,250 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 10th August 2021 11:56 PM | Last Updated : 10th August 2021 11:56 PM | அ+அ அ- |

விருதுநகா் அருகே 5,250 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு, 2ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து, விருதுநகா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் அருகே வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கடந்த 6 ஆம் தேதி விருதுநகா் -அருப்புக்கோட்டை அல்லம்பட்டி முக்குசாலையில், குற்றப்பிரிவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ கொண்ட 105 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து, போலீஸாா் 5,250 கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
பின்னா், வாகனத்தில் வந்த மம்சாபுரத்தைச் சோ்ந்த மைதீன் பிச்சை மகன் அமானுல்லா மற்றும் வாகன ஓட்டுநா் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு, விருதுநகா் குற்றவியல் நீதித்துறை எண்-1 நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் அடிப்படையில், அமானுல்லா மற்றும் வாகன ஓட்டுநா் ரமேஷ் ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி மருதுபாண்டி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.