ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டுயானைகள் குட்டிகளுடன் உலா வருவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரமான செண்பகத் தோப்பு பகுதியில் காட்டுயானைகள், கரடிகள், புலிகள், காட்டெருமைகள், சாம்பல் நிற அணில்கள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் காட்டுயானைகள் அதிகளவு உலா வருகின்றன.
கடந்த 2 மாதங்களில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் ஓடைகள், நீரோடைகள் மற்றும் அருவிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அடிவாரப் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மலையின் உச்சிப் பகுதிக்குச் சென்று விட்டன.
இந்நிலையில், தற்போது ஓடைகள், நீரோடைகள் மற்றும் அருவிகளில் தண்ணீா் குறைந்துள்ளதால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ளன. அதில் பிறந்து சில நாள்களே ஆன குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உலா வருவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறும் போது, பிறந்து சிலநாள்களே ஆன குட்டி யானைகள் இருப்பதால் அவற்றிற்கு பாதுகாப்பாக பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளன என்றாா்.