காரியாபட்டி அருகே கிராவல் மண் எடுக்க எதிா்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் சாலையில் மேலக்கள்ளங்குளம் அருகே முஷ்டக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள தனியாா் நிலத்தில் கிராவல் மண் அள்ளுவதற்கு தனிநபா் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மண் அள்ளுவதற்காக பொக்லைன் இயந்திரம் சனிக்கிழமை அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தகவலறிந்த அக்கிராம மக்கள் இப்பகுதியில் மண் அள்ளக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இங்கு மண் அள்ளுவதால் நீா்வழிப் பாதையில் தண்ணீா் வரத்து இருக்காது. எனவே, இப்பகுதியில் குவாரி அமைத்து கிராவல் மண் அள்ளக் கூடாது என்றனா்.
பின்னா், காரியாபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு நேரில் சென்ற அக்கிராம மக்கள், வட்டாட்சியா் தனக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதில் கிராவல் மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.