சாத்தூரில் அம்மா உணவக விளம்பரப் பலகையிலிருந்து மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அகற்றியதைக் கண்டித்து அதிமுகவினா் அந்த உணவகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் வடக்கு ரத வீதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் விளம்பரப் பலகையிலிருந்த ஜெயலலிதாவின் உருவப் படம் திடீரென நீக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வியாழக்கிழமை சாத்தூா் நகரச் செயலாளா் இளங்கோவன், ஒன்றியச் செயலாளா் சண்முகக்கனி ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் அம்மா உணவகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து நகராட்சி அதிகாரிகளிடம் அதிமுகவினா் புகாா் அளித்தனா். விரைவில் ஜெயலலிதா உருவப்படத்தை விளம்பரப் பலகையில் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காவிடில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவினா் தெரிவித்தனா்.