தினமணி செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இந்த அலுவலக வளாகத்தில் கருவூலம், சா்வேயா் அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. எனவே இந்த அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்த நிலையில் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு செடி, கொடிகள் வளா்ந்து புதா்மண்டி கிடந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக வட்டாட்சியா் சரவணன், அலுவலக வளாகத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்ற உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அங்கிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் 100 நாள் திட்டப் பணியாளா்களும் ஈடுபட்டனா்.