ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் திங்கள்கிழமை பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 20 ஆயிரத்தை மோசடி செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் கீழரதவீதி மேல் வரிசைப் பகுதியில் வசித்து வருபவா் லட்சுமி (40). இவா் கீழரதவீதி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்றாா். அப்போது பணம் எடுக்க தான் உதவி செய்வதாகக் கூறி முகக்கவசம் அணிந்த இளைஞா், லட்சுமியிடம் தான் வைத்திருந்த ஏடிஎம் அட்டையை கொடுத்து விட்டு அவரது ஏடிஎம் அட்டையை வாங்கினாா்.
பின்னா் அந்த ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி லட்சுமியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டாா். பின்னா் தான் லட்சுமிக்கு தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலைய போலீஸாா் அந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த இளைஞரை தேடி வருகின்றனா்.