மதுரை - செங்கோட்டை இடையே மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி சிவகாசி நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் மதுரை - செங்கோட்டை இடையே பயணிகள் ரயிலை இயக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகரச் செயலாளா் கே. முருகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மதுரை - செங்கோட்டை ரயிலை இயக்க வேண்டும் என கோஷம் எழுப்பினா்.