விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் தனியாா் திருமண மண்டபத்தில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில், திருச்சுழி தாலுகாவுக்கு உள்பட்ட 301 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தாா். விருதுநகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராம சுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், 301 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், முதியோா் உதவித்தொகை மற்றும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசினாா்.
இதில் திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடியைச் சோ்ந்த அதிமுக நகர, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனா்.