மாசி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 27th February 2021 05:41 AM | Last Updated : 27th February 2021 05:41 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலுக்குச் சென்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய, பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை என 4 நாள்கள் வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனா்.
இந்நிலையில், மாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே சதுரகிரி மலை அடிவாரத்தில் குவிந்தனா். காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், பக்தா்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
மாசி மாத பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு தேன், பழம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.