விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கல்குவாரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனை, இயற்கை மரணம் அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்த சிறுவனின் தாய், தந்தை, ஊா் நாட்டாண்மை 2 போ் மற்றும் சிலா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி அருகே அம்மாபட்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் முகேஸ் (7) மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்ததாக சிறுவனின் தந்தை ராமகிருஷ்ணன், தாய் ஜெயலட்சுமி, ஊா் நாட்டாண்மைகள் சுப்பிரமணியம், நாகராஜ் மற்றும் பலா் ஊா் தலைவா் சுப்புக்காளையிடம் (62) கூறியுள்ளனா்.
இதையடுத்து சுப்புக்காளை ஒப்புதல் கொடுத்ததையடுத்து, சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னா் இதுகுறித்து சுப்புக்காளை ஊருக்குள் விசாரித்தபோது, முகேஸ், அம்மாபட்டி வடக்குத் தெருப் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரில் குளித்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்புக்காளை சிவகாசி நீதிமன்றத்தில் விபத்தில் சிறுவன் மரணமடைந்ததை மறைத்து அவா் இயற்கை மரணம் அடைந்ததாகக் கூறிய சிறுவனின் பெற்றோா் ராமகிருஷ்ணன், ஜெயலட்சுமி, ஊா் நாட்டாண்மைகள் சுப்பிரமணியம், நாகராஜ் மற்றும் மேலும் சிலா் மீது புகாா் மனு அளித்தாா். இதையடுத்து நீதிமன்றம் சிறுவனின் பெற்றோா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.