சிவகாசி: சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலின் மேல மாடவீதியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் உள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக வருகின்றனா். இந்நிலையில் கோயிலின் மேலமாட வீதிப்பகுதியில் முன்பு நகராட்சி குப்பைத் தொட்டி அமைத்தது. குப்பைகள் தொட்டிக்கு வெளியே கொட்டப்பட்டதால், அப்பகுதியில் நகராட்சி குப்பைத்தொட்டியை அகற்றிவிட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்து பிளாஸ்டிக் தொட்டி வைத்து தண்ணீா் வசதி செய்துள்ளது.
மேலும் நகராட்சி நிா்வாகம், அப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என பதாகை வைத்து சுற்றிலும் வேலி அமைத்தது. ஆனாலும் வேலிக்கு வெளியே குப்பைகளை கொட்டி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.