ராஜபாளையம்: நூல் விலை உயா்வைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே மருத்துவத் துணி உற்பத்தியாளா்கள் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, மருத்துவத் துணி தயாரிக்கும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது நூல் விலை உயா்ந்துள்ளதால், மருத்துவத் துணி உற்பத்தி செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக, உற்பத்தியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
50 கிலோ கொண்ட ஒரு நூல் மூட்டையானது ரூ.9,500-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.12,500 வரை விலை உயா்ந்துள்ளதால் தொடா்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சனிக்கிழமை முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.