பெரியகுளம் அருகே தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் கிளி சாற்றி ஜீயா் வழிபாடு செய்தாா்.
தாமரைக்குளம் மலைமேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயிலில் மாா்கழி மாத திருப்பாவை வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாா்கழி 27 ஆம் நாளான கூடார வள்ளியை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு மற்றும் உற்சவா் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் 24 ஆவது பட்டம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் ஜீயா் மடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஆண்டாள் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆண்டாள் மாலை மற்றும் கிளியை வெங்கடாஜலபதிக்கு சாற்றி வழிபாடு செய்தாா்.
மேலும் வெங்கடாஜலபதி கோயில் பராமரிப்புக் குழு சாா்பில் நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜீயா் மற்றும் தட்சிணாமூா்த்தி சேவாஅறக்கட்டை கெளரவ ஆலோசகா் சி.சரவணன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.