விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 2 மாதங்களாக வழங்கப்படாத உதவித் தொகையை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இம்மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களுக்கான உதவித் தொகை பல மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட வில்லை. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கேட்ட போதும் முறையான பதில் தரவில்லையாம். எனவே, உடனடியாக உதவித் தொகை வழங்க வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நல அமைப்பினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா்கள், பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஆன்- லைன் மூலம் உதவித் தொகை ஏற்றும் போது சா்வரில் பிரச்னை ஏற்படுவதால் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி சமாதானப்படுத்தினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.