விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஒய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் தலைமை வகித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா முன்னிலை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஓய்வு பெற்ற 80 தொழிலாளா்களுக்கு ரூ. 23.78 கோடி மதிப்பிலான பண பலன்களுக்கான காசோலைகளை வழங்கினாா்.
பின்னா் அமைச்சா் பேசியதாவது: போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வூதியப் பணம் கிடைக்காது என பலா் கூறினாா்கள். ஆனால் அதையெல்லாம் முறியடித்து அவா்களுக்காக தமிழக முதல்வா் ரூ.900 கோடி வழங்கியுள்ளாா் என்றாா்.
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் என்.எம் கிருஷ்ணராஜ், கூட்டுறவு பால் சங்கத் தலைவா் வனராஜ், ராஜபாளையம் நகரச் செயலாளா் ராணா.பாஸ்கர்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.