சாத்தூா் அருகே கள்ள நோட்டுகள் மாற்றியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பெரியகொல்லபட்டி கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் சத்திரபட்டியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (36), பெரியகொல்லபட்டியை சோ்ந்த பெருமாள்சாமி (27), பிச்சை மைதீன் (26), ஷேக்முகமது (21) ஆகிய 4 பேரும் மது வாங்குவதற்காக கள்ள நோட்டுகளை வியாழக்கிழமை இரவு மாற்றியுள்ளனா்.
இதில் சந்தேகமடைந்த மதுக்கூட விற்பனையாளா் செல்வக்குமாா், சாத்தூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளாா். தகவலின்பேரில், அங்கு வந்த போலீஸாா் 4 இளைஞா்களிடமும் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சந்தோஷ்குமாா் என்பவா் வீட்டில் வைத்து கள்ள நோட்டுகளை கலா் பிரிண்டா் மூலம் தயாா் செய்தது தெரியவந்தது. மேலும், அவா்களிடமிருந்து 1 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளையும், கள்ள நோட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்திய கலா் பிரிண்டா் உள்ளிட்ட பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தேஷ்குமாா், பிச்சை மைதீன், ஷேக் முகமது ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அங்கிருந்து தப்பியோடிய பெருமாள்சாமியை போலீஸாா் தேடி வருகின்றனா்.