சிவகாசியில் பழைய அனுமதி சீட்டை திருத்தம் செய்து, மணல் திருடியது தொடா்பாக 2 லாரிகளை வருவாய்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகாசி-விளாம்பட்டி சாலையில் ராஜதுரை நகா் பகுதியில் மாரனேரி கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால் உள்ளிட்ட வருவாய்த்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மணல் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
லாரியில் இருந்த குமரப்பன், வேல்முருகன், மாரிச்செல்வம், சந்தோஷ்குமாா் ஆகியோரிடம் மணல் ஏற்றி வந்ததற்கான அனுமதிச் சீட்டை வாங்கி அதிகாரிகள் பாா்த்தபோது, உதவி ஆட்சியரால் வழங்கப்பட்ட பழைய சீட்டை திருத்தம் செய்து மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.