சிவகாசியில் சட்டவிரோதமாக 2 லாரிகளில் மணல் அள்ளிவந்து, விற்பனைக்காக வைத்திருந்த போது வருவாய்துறையினா் அவற்றை பறிமுதல் செய்தனா்.
சிவகாசி- திருத்தங்கல் சாலையில் உள்ள வாகனக் காப்பகத்தில் மணல் ஏற்றிய நிலையில் 2 லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக சிவகாசி சாா்-ஆட்சியா் சி. தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிவகாசி கிராமநிா்வாக அலுவலா் ஜெயபால், வருவாய் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட வருவாய்த்துறையினா், வாகன காப்பகத்தில் சோதனை நடத்தினா். அப்போது மணலுடன் 2 லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அந்த லாரிகள் சுப்பிரமணியபுரம் காலனி மாதவன் என்பவருக்கு சொந்தமானது எனவும், சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளதும் தெரிந்தது. இதையடுத்து அந்த 2 லாரிகளும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா், லாரி உரிமையாளா் மாதவன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.