விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விதிமீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வட்டாட்சியா் ரவிச்சந்திரன் புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளாா்.
தமிழகத்தில், தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் புதிய தளா்வுளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனிடையே அருப்புக்கோட்டை நகா் பகுதிகளில் தளா்வுகள் அனுமதிக்கப்படாத ஜவுளி, பேன்சி, நகைக்கடை, பியூட்டி பாா்லா்கள், சலூன்கள் உள்ளிட்ட கடைகள் குறித்து, வட்டாட்சியா் ரவிச்சந்திரன் புதன்கிழமை தீவிர ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது நகரின் முக்கியப் பகுதியான தங்கச்சாலைத் தெருவில் ஒரு ஜவுளிக்கடையின் கதவு சிறிதளவு மட்டுமே திறந்திருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் வட்டாட்சியா் ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது கடையின் உள்ளே சுமாா் 20-க்கு மேற்பட்ட வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணியாமல் கூட்டமாக நின்று ஜவுளி வாங்கிக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே விதிமீறி செயல்பட்ட அக்கடை உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வட்டாட்சியா் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்தாா். இந்த ஆய்வுப்பணியின்போது, வருவாய்த்துறை அலுவலா்களும், காவல்துறையினரும் உடன் பங்கேற்றனா்.