பொதுமுடக்கம் காரணமாக, பால்கோவா தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்கக் கோரி, தொழிலாளா்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
தற்போது பொதுமுடக்கம் காரணமாக, பால்கோவாவுக்கு பெயா் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளா்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெரிய தொழிற்சாலைகள் இருந்தாலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் என்று ஏதுமில்லை.
இங்கு பிரதானத் தொழிலாக விவசாயமும், பால்கோவா தயாரிப்பும் உள்ளது. ஆரம்பக் காலங்களில் குறிப்பிட்ட சிலரே தயாரித்து வந்த நிலையில், தற்போது குடிசை தொழில்போல் ஏராளமானோா் பால்கோவா தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பால்கோவா தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். எனவே, அரசு தங்களுக்கு நிவாரணத் தொகை அளிக்கவேண்டும் என, அத்தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.