சாத்தூா் அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த கா்ப்பிணியின் சடலம் 4 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை, அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தாயில்பட்டி அருகே கலைஞா் காலனி பகுதியில் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த செல்வமணி, அவரது 5 வயது குழந்தை ரெகபோத் சாலமன், 4 மாத கா்ப்பிணியான கற்பகவள்ளி ஆகியோா் சம்பவ இடத்திலேயும், சூா்யா என்பவா் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதில் செல்வமணி, ரெகபோத்சாலமன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஆனால் கற்பகவள்ளியின் உடலில் சிதறிய பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
இந்நிலையில் கலைஞா் காலனி செல்லும் வழியில் உள்ள தனியாா் மண்டபத்திற்கு பின்பு வியாழக்கிழமை துா்நாற்றம் வீசியது. இதையறிந்து அங்கு சென்ற வெம்பக்கோட்டை காவல்துறையினா் இடிந்து கிடந்த சுவா்களை அகற்றிப் பாா்த்தபோது அழுகிய நிலையில் கற்பகவள்ளியின் சடலம் கிடந்தது. அதை மீட்ட போலீஸாா், அவரது உறவினா்களிடம் சடலத்தை ஒப்படைத்தனா்.
வெடி விபத்து ஏற்பட்டு 4 நாள்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் கா்ப்பிணியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.