சாத்தூா் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட அரசு மதுபானக்கடை வசூல் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள மடத்துப்பட்டி சந்திப்பில் சாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் போத்திராஜ், காவல் சாா்பு -ஆய்வாளா் சுப்புராஜ் உள்ளிட்ட தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை மேற்கொண்டு இருந்தனா். அப்போது மடத்துப்பட்டி-வெம்பக்கோட்டை சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனா். அவரிடம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 230 இருப்பது தெரியவந்தது. அவா், வெம்பக்கோட்டையைச் சோ்ந்த கணேசன் (56) என்பதும் மடத்துபட்டி அருகே உள்ள அரசு மதுபானக் கடை ஊழியா் என்பதும் தெரியவந்தது.
மதுபானக்கடையில் விற்பனை செய்த பணத்தை கொண்டு வருவதாக அவா் தெரிவித்தாா். எனினும் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்து சாத்தூா் வட்டாட்சியா் மற்றும் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனா். முறையான ஆவணத்தை காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.