சிவகாசி அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மனைவி ஜெயலட்சுமி (59). இவரது மகன் சுரேஷ் சான்றிதழ் படிப்பு படித்துவிட்டு, சிவகாசியில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாராம். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் பாக்கியராஜ் (58), ஜெயலட்சுமியிடம் உங்கள் மகனுக்கு ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறேன் எனவும், அதற்கு ரூ. 6 லட்சம் தேவைப்படும் எனவும் கூறியுள்ளாா்.
இதையடுத்து ஜெயலட்சுமி தனது வீட்டுப் பத்திரத்தை அடக்கு வைத்து , பாக்கியராஜிடம் ரூ. 5 லட்சம் கொடுத்தாராம். பணத்தைப் பெற்றுக்கொண்ட பாக்கியராஜ் வேலை வாங்கித் தரவில்லையாம்.
இதனிடையே ஜெயலட்சுமி, பாக்கியராஜிடம் பணத்தை திரும்பக்கேட்டபோது, கொடுக்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் பாக்கியராஜ் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.