ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெய்த மழை காரணமாக வியாழக்கிழமை வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
கடந்த இரு நாள்களாக ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை இரவு பெய்த மழையால் அடிவாரத்தில் உள்ள அருவி மற்றும் நீரோடைகளிலிருந்து அருகில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீா்வரத்து ஏற்பட்டது.
இதில் மம்சாபுரம் பகுதியில் உள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாயத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயின் ஒரு மடையைத் திறந்து விட்டனா். மறுகால் பாயும் தண்ணீா் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் மற்றும் திருமாலை வணங்கி கண்மாய் ஆகியவற்றிற்கு வந்து கொண்டிருக்கிறது.
வாழைக்குளம் கண்மாயைப் பொறுத்த வரை கடந்த நவம்பரில் இருந்து தற்போது வரை சுமாா் 5 முறை நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது.
இக்கண்மாய்க்கு விரியன் கோயில் பகுதியிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் வாழைக்குளம் கண்மாய் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.