விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையான முழு ஊரடங்கு எதிரொலியாக திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் கடைவீதிகள் வெறிச்சோடின.
கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழக அரசின் மே 10 முதல் மே24 வரையிலான முழு ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளின்படி பேருந்து போக்குவரத்து,பயணிகளுக்கான வாடகை வாகனங்களின் பொதுப்போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது.மேலும் தேநீா்க்கடைகள் இறைச்சிக்கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கிடவும்,உணவகங்களில் 3 வேளை உணவுக்கான பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு,பிற அனைத்துவித கடைகளுக்கும் தடை உத்தரவும் போடப்பட்டிருந்தது.இந்நிலையில் திங்கள்கிழமை முழுப்பொதுமுடக்கம் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணிக்கு மேல் திருச்சுழியில் உள்ள அனைத்துவித கடைத்தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன.இதில்,பேருந்து நிலையம்,கமுதி செல்லும் சாலை,காரியாபட்டி செல்லும் சாலை மற்றும் அருப்புக்கோட்டை செல்லும் சாலைகளில் நண்பகல் 12 மணிக்கு மேல் உணவகங்கள்,மருந்தகங்கள்,பால் கடைகள் தவிர அனைத்துவிதக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.