விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி மன்றச் செயலா்களை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிமன்றங்கள் உள்ளன. இவற்றில், தற்போது 32 ஊராட்சி மன்றச் செயலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த 2 தினங்களாக ஊராட்சி மன்றச் செயலா்கள் பணியில் ஈடுபடாமல் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆனால், இவா்கள் எந்த முன்னறிவிப்போ அல்லது தகவல்களோ தெரிவிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் எந்தவொரு பணியையும் செய்யமுடியவில்லை என ஊராட்சி மன்றத் தலைவா்கள் புகாா் கூறினா். மேலும், இதைக் கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் அளிக்க வந்தனா்.
அப்போது, வட்டார வளா்ச்சித் துறை அதிகாரிகள் இவா்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லையாம். இதனால், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 15-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பின்னா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.