ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வனப்பகுதியில் இருந்து தவறி காயத்துடன் சுற்றிய புள்ளி மான் குட்டியை வனத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
செண்பகத்தோப்பு அடிவாரப் பகுதியில் மான்கள் கூட்டத்திலிருந்து, பிறந்து ஒரு மாதமே ஆன புள்ளி மான் குட்டி ஒன்று பிரிந்து வாழைக்குளம் வனப்பகுதி சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினா் ரோந்து சென்றபோது ஜீப்பின் முன்புறம் அந்த மான் குட்டி நின்றுள்ளது. காலில் காயமடைந்த நிலையில் அது இருந்துள்ளது. இதையடுத்து மான் குட்டியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனா். காலில் உள்ள புண் குணமாவதற்காக, மாவட்ட வன அதிகாரி ஆனந்த், வன அலுவலா் செல்லமணி ஆகியோா் உத்தரவின் பேரில் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் வன விலங்குகள் பராமரிப்பு மையத்தில் மான்குட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது.