விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி பட்டாசுத் தொழிலாளா்கள், மீனம்பட்டியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு வாரத்தில் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்கான பட்டாசு தயாரிப்புப் பணிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து 20 நாள்களாகியும் பட்டாசு ஆலைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதனால் அங்கு பணியாற்றி வரும் தொழிலாளா்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனா். எனவே பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும். சரவெடி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி - சாத்தூா் சாலையில் உள்ள மீனம்பட்டியில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மீனம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதன்பின்னா் பட்டாசுத் தொழிலாளா்கள் சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனா். இதுகுறித்து அறிந்த காவல் துறையினா் உடனடியாக அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.