சிவகாசி அருகே காணாமல் போன சிறுமியை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டியிடம் வீரமுத்தரையா் முன்னேற்ற சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கடந்தாண்டு மாா்ச் இறுதியில் கரோனா தொற்று பரவியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீா் கூட்டம் தடைபட்டது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் குறைந்ததால் நீண்ட இடைவெளிக்குப் பின்னா், அரசு உத்தரவின் பேரில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை நேரடியாக அளித்தனா்.
இதில், சிவகாசி, சாத்தபிள்ளைபட்டி கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி காணாமல் போய் 40 நாள்கள் கடந்து விட்டன. இதுகுறித்து ஆமத்தூா் காவல் நிலையம், மாவட்ட சமூக நலம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் பெற்றோரை அலைக்கழிக்கின்றனா். எனவே, சிறுமியை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரமுத்தரையா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.