அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 1008 தீபங்கள் வைத்து சிறப்பு வழிபாடும் மேலும் பாபாவின் 103ஆவது குருபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி அருகே செட்டிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு கோவில் உள்வளாகத்தில் 1008 தீபங்கள் ஏற்றியும், அழகிய வண்ண, வண்ண மலர்களால் பாபாவின் திருஉருவச்சிலை, நந்தி தேவர், உற்சவர் ஆகியவற்றைச் சுற்றி அலங்கரித்தும் விஜயதசமி வழிபாடு நடைபெற்றது.
இதையும் படிக்க- பாலதோஷம் போக்கும் திருமாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்
அதையடுத்து அருள்மிகு பாபாவின் 103ஆவது முக்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு தீப, தூப ஆரத்தி வழிபாடும் நடைபெற்றது. இதையடுத்து, உலக நன்மை வேண்டியும், கரோனாவிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நிலைபெற்ற நலம்பெறவும் சிறப்பு சங்கல்பத்துடன் அர்ச்சனை நடைபெற்றது.
பின்னர் வழிபாட்டிற்கு வந்திருந்த பெண் பக்தர்களுக்கு மங்களப் பொருட்களான குங்குமம், மஞ்சள், வெற்றிலை, வளையல், இனிப்புகள், மாங்கல்யகயிறு, சட்டைத்துணி ஆகிய பொருள்கள் தானமாக வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் கோவில் நிர்வாகியும், அன்பு ரியல் எஸ்டேட் நிறுவனரும் மனிதத்தேனீ என மக்களால் அழைக்கப்படுபவருமான வி.சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.