விருதுநகரில் உள்ள பிரபல மூட்டு அறுவைச் சிகிச்சை மருத்துவா் வீட்டில் மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருட முயன்றுள்ளனா்.
விருதுநகா் ஏ-4 சாலையில் பிரபல மூட்டு அறுவைச் சிகிச்சை மருத்துவா் இளங்கோவின் மருத்துவமனை உள்ளது. இவா், விருதுநகா்- மதுரை சாலை பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், மருத்துவா் தனது குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்ததை அறிந்த மா்ம நபா்கள், வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோ, அலமாரி உள்ளிட்ட இடங்களில் பணம், நகை உள்ளிட்டவற்றை தேடியுள்ளனா். ஆனால், எதுவும் கிடைக்காததால் திருடா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.
இதையடுத்து, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து, பக்கத்து வீட்டினா் மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். உடனே, வீடு திரும்பிய அவா், முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மருத்துவா் விருதுநகா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததன்பேரில், போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.