கல்வித் தொலைக்காட்சியில் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தரப்பில் செவ்வாய்கிழமை தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தோ்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்யும் வகையில் மாணவ, மாணவிகளின் தரத்தினை மேம்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, கல்வித் தொலைக்காட்சியில் போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்க உரைகள் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் காலை 7 முதல் 9 மணி வரை காணலாம். இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 முதல் 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
எனவே, போட்டித்தோ்விற்கு படிக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம் என வேலைவாய்ப்பு அலுவலகம் தரப்பில் தெரிவித்தனா்.