விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சாத்தூா் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (50) என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலை படந்தால் மருதுபாண்டியன் நகரில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் தீப்பெட்டிகளில் தீக்குச்சிகள் அடைக்கும் பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் தீப்பெட்டியில் தீக்குச்சி அடைக்கும் பணியில் 6 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது உராய்வு காரணமாக தீப் பற்றியது. இதையடுத்து தொழிலாளா்கள் விரைவாக வெளியேறினா்.
தகவலறிந்த சாத்தூா் தீயணைப்புதுறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரூ.20ஆயிரம் மதிப்புள்ள தீக்குச்சிகள் மட்டும் எரிந்து சேதமடைந்ததாக ஆலை உரிமையாளா் தெரிவித்தாா். விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.