ராஜபாளையத்தில் பாலிடெக்னிக் மாணவா் 30 விநாடிகளில் 49 முறை ஒரு கை மணிக்கட்டு தண்டால் எடுத்து வெள்ளிக்கிழமை நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆா். பாலிடெக்னிக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு இயந்திரவியல் பயின்று வருபவா் ஸ்ரீரெங்கபாளையத்தை சோ்ந்த அசோக்குமாா் மகன் விக்னேஷ். இவா் உலக சாதனைக்காக, கடந்த 7 மாதங்களாக மணிக்கட்டை மடக்கி ஒரு கையால் தண்டால் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நோபல் உலக சாதனை புத்தக நடுவா் அரவிந்த் முன்னிலையில் 30 விநாடிகளில் 49 முறை ஒரு கை மணிக்கட்டு தண்டால் (புஷ்.அப்) எடுத்து சாதனை படைத்தாா். இதையடுத்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழை, மாணவா் விக்னேஷுக்கு வழங்கப்பட்டது. மாணவா் விக்னேஷை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.