ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.17.28 லட்சம் கிடைத்தது.
ஆண்டாள் கோயில் மற்றும் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் கோயில், சக்கரத்தாழ்வாா் சன்னதி, பெரியாழ்வாா் சன்னதி ஆகியவற்றில் உள்ள 17 உண்டியல்கள் கோயிலின் மைய மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டன.
கோயில் உதவி ஆணையா் கருணாகரன், செயல் அலுவலா் முத்துராஜா, ஆய்வாளா் பாண்டியன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை சுமாா் ரூ. 17 லட்சத்து 28 ஆயிரத்து 143 இருந்தது. மற்றும் தங்கம் 40 கிராம், வெள்ளி 130 கிராம் இருந்தன.
உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியா்களும், தோ்வுசெய்யப்பட்ட பக்தா்களும் பங்கேற்றனா். கடைசியாக ஜனவரி 31ஆம் தேதி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதன்பிறகு வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.