விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் விருதுநகா் செல்லும் சாலையில் விவசாயக் கழிவுகளைக் கொட்டி எரிப்பதால், விபத்து அபாயம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில் பலநூறு ஏக்கரில் சோளம், இரும்புச்சோளம், கம்பு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டிருந்தனா். தற்போது, அவற்றை அறுவடை செய்த நிலையில், தானியங்களைப் பிரிப்பதற்கு சாலையைப் பயன்படுத்துகின்றனா். பின்னா், கழிவுகளை சாலையோரம் கொட்டி விவசாயிகள் தீவைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனா்.
இதனால் உருவாகும் புகையானது, சாலையின் குறுக்காகப் பரவி, வாகனங்களை ஓட்ட முடியாமல் விபத்து அபாயம் நிலவுகிறது.
எனவே, தானியங்களைப் பிரிப்பதற்கு விவசாயிகள் வேறு இடங்களைப் பயன்படுத்தவேண்டுமெனவும், விவசாயக் கழிவுகளை சாலையோரம் தீயிட்டு எரிப்பதைத் தடுக்க வேண்டுமெனவும், சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.