விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோா், 50 சதவீத மானியத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் தமிழகம் உள்ளது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில்
குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டிற்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி, இதில் எது குறைவானதோ அதை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை விருதுநகா் மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்த, வேலை வாய்ப்புகளைப் பெருக்க அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும். தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடா்பான விவரங்களுக்கு- 39, விஸ்வநாதபுரம் பிரதான சாலை, மதுரை - 14 எனும் முகவரியில் உள்ள துணிநூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 99447 93680, 96595 32005 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.