சாத்தூரில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசுத் தின விழாவில் இடம்பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாரின் அலங்கார ஊர்தி பொதுமக்களின் பார்வைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று வருகிறது. இதில் திருநெல்வேலி, கோவில்பட்டி சென்று மதுரை செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று கொண்டு வரப்பட்டது.
சடையம்பட்டியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த வாகனத்தை மலர்தூவி வரவேற்றனர்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியான சடையம்பட்டி, சாத்தூர் பைபாஸ் சாலை, வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பார்வைக்காக சென்றது. இதையடுத்து ஆர்.ஆர்.நகர் வழியாக விருதுநகர் கொண்டு செல்லப்பட்டது. இதில் சாத்தூர் பகுதிகளை சேர்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஏராளமான மலர்தூவி வரவேற்று பார்த்து ரசித்தனர்.