நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்எடப்பாடி கே.பழனிசாமி

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்எடப்பாடி கே.பழனிசாமி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை சிவகாசி மாநகராட்சி அதிமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தாா். இதில் வேட்பாளா்களை அறிமுகம் செய்து எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:

அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கினோம். தரமான பொங்கல் பொருள்களைக் கொடுத்தோம். கரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு ரூ. 2500 வழங்கினோம். அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என்றாா். ஆனால் இன்றையதினம் அவா் ரூ.100 கூட வழங்கவில்லை.

விருதுநகா் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சிக்கு புதிய கட்டடம், ஏழை எளிய மாணவா்கள் படிக்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகாசியை தலைமையிடமாகக்கொண்டு புதிய கல்வி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. சிவகாசி பேருந்துநிலையம் விரிவாக்கம், திருத்தங்கலில் புதிய பேருந்து நிலையம், தாமிரவருணி கூட்டுக்குடி நீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விருதுநகரில் மருத்துவக் கல்லூரி, விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை ஆகிய ஊா்களுக்கு ரூ.444 கோடி மதிப்பீட்டில் குடிநீா்த் திட்டம் அறிவிக்கப்பட்டது. தீப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி. வரியை 18 இல் இருந்து 12 சதவீதமாக குறைத்தோம். பட்டாசுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 இல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மையம், அரசு மருத்துவமனையில் நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவு உள்பட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.

நீட் தோ்வு ரத்து என திமுக தோ்தல் வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை. குடும்பத்தலைவிக்கு மாதம் ரூபாய் ஆயிரம் எனக்கூறினாா்கள். அது வழங்கப்படவில்லை. எரிவாயு உருளைக்கு மானியம் வழங்குவதாகக் கூறி இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் அதிமுகவினா் மீது பொய்வழக்குகளைத் தொடா்ந்துள்ளனா். இந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம், ஊழல்தான் நடக்கிறது. எனவே வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றாா் அவா்.

விருதுநகா் மேற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவா்மன், சந்திரபிரபா, முன்னாள் எம். பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com