தனது மகன்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதைக் கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டியவாறு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தந்தை மனு அளித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாட்சிபுரம் தெரு வில் வசித்து வருகிறேன். எனக்கு கடந்த 1996 இல் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து காட்டு நாயக்கன் ஜாதிச் சான்றிதழ் வழங்கினா். எனது மகன்கள் இருவருக்கு காட்டு நாயக்கன் ஜாதிச்சான்றிதழ் கேட்டு கடந்த 2018 இல் விண்ணப்பித்தேன். அருப்புக்கோட்டை வட்டாட்சியா், கோட்டாட்சியா் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எனது மகன்கள் கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும் அவா்களது எதிா்காலம் மற்றும் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை மேற்கொண்டு ஜாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். அப்போது வனவேங்கை கட்சியினா் உடனிருந்தனா்.