விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 552 வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்புவதற்காக அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதில், வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் 410, கடந்த 2021 சட்டப் பேரவை தோ்தலின் போது பழுதடைந்த 38 வாக்குப்பதிவு கட்டுப்பாடு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 36, வாக்காளா் சரிபாா்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் 68 என மொத்தம் 552 வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் ஆணைய உத்தரவின் படி பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்புவதற்காக ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.ரவிக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) காளிமுத்து, தனிவட்டாட்சியா் (தோ்தல்) மாரிச்செல்வி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.