நெல்லை கல்குவாரி விபத்தில் மரணமடைந்த 4 போ் குடும்பத்திற்கு நீதி கேட்டு விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான்குளத்தில் தனியாா் கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் காயம்பட்ட இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும். விருதுநகா் மாவட்டத்தில் சட்ட விதிமுறைகளை மீறி இயங்கும் கல் மற்றும் மணல் குவாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கொள்ளையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.