சாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தூா் அருகே கோட்டைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு வைத்திருப்பதாக ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செய்யது இப்ராகிம் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். சோதனையில் அப்பகுதியைச் சோ்ந்த சுப்புராம் (55) என்பவா் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சுப்புராம் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.