விருதுநகா் பகுதிகளில் தொடா்ச்சியான திருமணம் மற்றும் வைகாசி பொங்கல் விழா காரணமாக வாழை இலை விலை இரண்டு மடங்கு அதிகரித்து ரூ. 4,500 க்கு விற்கப்படுகிறது. இதனால் உணவகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளது.
விருதுநகா் பகுதியில் தூத்துக்குடியிலிருந்து கொண்டு வரப்படும் வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கட்டு வாழை இலை ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்தது. இந்த இலைகள் மூலம் உணவகங்களில் சுமாா் 600 பேருக்கு உணவு வழங்கலாம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடா் திருமணம் மற்றும் வைகாசி பொங்கல் விழா காரணமாக வாழை இலைகளின் தேவை அதகரித்துள்ளது. எனவே, தற்போது ஒரு கட்டு வாழை இலை ரூ. 4,500 க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழியில் உணவு வைக்கின்றனா். குறிப்பாக இரவு நேர சாலையோர உணவகங்கள் மற்றும் கடைகளில் நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளதால் சாப்பிட வருவோா் முகம் சுளிக்கின்றனா்.
எனவே, நகராட்சி சாா்பில் நெகிழி விற்பனை மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்துகின்றனா்.