விருதுநகா்: விருதுநகரில் வட்டாட்சியரை தரக்குறைவாகப் பேசியதாக, கூடுதல் தலைமைச் செயலரைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா்- மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அரசு விருந்தினா் மாளிகைக்கு கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி எஸ்.ஜவஹா் புதன்கிழமை வந்திருந்தாா். விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி அறிவுறுத்தலின் பேரில், விருதுநகா் வருவாய் வட்டாட்சியா் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளா் ஜெபிரகாஷ் ஆகியோா் அவரை வரவேற்று தேநீா் வழங்கியுள்ளனா். அப்போது வட்டாட்சியா் மற்றும் வருவாய் ஆய்வாளரை அவா் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகா் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் முன்னாள் மாநிலச் செயலா் பொன்ராஜ் தலைமையில் விருதுநகா் விருந்தினா் மாளிகை முன்பு கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கூடுதல் தலைமை செயலா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.