ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று காலை கோவிந்தா, கோபாலா என்ற முழக்கங்களை எழுப்பியபடியே பக்தர்கள் செப்பு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டு இன்று மாலை திருக்கல்யாணம் நடைபெறுவதால் காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
இதற்காக மேளதாளம் முழங்க ஆண்டாள் ரங்கமன்னார் கோயிலில் இருந்து இன்று காலை கோயிலின் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது .
இதைத் தொடர்ந்து ஏழு மணி அளவில் கோவிந்தா, கோபாலா என்ற முழக்கம் எழுப்பியபடியே ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிலையத்திலிருந்து கிளம்பிய தேர் கீழரத வீதி, மேலரதவீதி, தெற்குரதவீதி, வடக்கு ரதவீதி என நான்கு ரத வீதிகளில் வந்து மீண்டும் நிலையம் அடைந்தது.
செப்பு தேரோட்டத்தையொட்டி நகரில் சிறிது நேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். குறிப்பாக அதிக அளவு பெண் பக்தர்கள் வந்து வடம்படித்து இழுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்பு தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்
முன்னதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தங்கள் குடும்பத்துடன் வந்து ஆண்டாள் ரெங்கமன்னார் சாமி தரிசனம் செய்தார்.
செப்பு தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சபரிநாதன் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் நகர போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.